Tuesday, April 8, 2008

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள்
அஷ்ஷைக்: முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித்
(தமிழில் எம்.ஜே.எம். ரிஸ்வான்)


بسم الله الرحمن الرحيم
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரித்தானது. அல்லாஹ்வின் அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள், தோழியர்கள், அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!
முதலாவது அம்சம்:-
இறையச்சத்தை ஏற்படுத்தி, அதனை வலுப்படுத்தக் கூடியவைகள்.

1-தொழுகைக்காக தயாராகுதலும், அதற்கான ஆயத்தங்கள் செய்வதும். இது பல அம்சங்களைக் கொண்டதாகும். அவைகளில்:-

முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப்-ஐ) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.

2-தொழுகையில் அமைதி பேணுதல். நபி (ஸல்) அவர்கள் தனது எலும்புகளின் இடுக்குகள் அதனதன் இடத்தில் மீண்டு நிலை பெறுகின்ற வரை தொழுகையில் அமைதி பேணுபவர்களாக இருந்தார்கள்.

3-தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல். (உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ஓதப்படும் திருமறை வசனங்களையும், திக்ருகளையும் சிந்தனைக்கு எடுத்து, அவைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்துதல். இதில் உள்ளம் கனிந்து, தாக்கம் ஏற்பட்டு, கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட வேண்டுமானால் ஓதப்படும் வசனங்கள், திக்ருகள் ஆகியவற்றின் கருத்துக்களின் ஆழத்தை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்ற போது:

(இன்னும் அவர்களுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் குருடர்களையும், செவிடர்களையும் போல் அதில் விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்-26:73) எனக் குறிப்பிடுகின்றது.
"தஸ்பீஹ் உடைய வசனங்கள் இடம் பெறுகின்ற போது தஸ்பீஹ் செய்வது கொண்டும், (இஸ்திஆதா) பாதுகாப்பு வசனங்கள் வருகின்ற போது பாதுகாவல் தேடுவது கொண்டும் செயல்படுவதுடன், வசனங்களுடன் மனம் விரிந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிந்திப்பதற்கு துணையாக அமையும். மேலும் ஃபாதிஹா அத்தியாயம் ஒதப்பட்டதும் அதற்குப் பதிலளித்து ஆமீன் கூறுவதால் மகத்தான கூலியும் கிடைக்கின்றது.

(இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் ஏனெனில் மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர். எவர் ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீனுடன் நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அதே போன்று இமாம் "ஸமி அல்லா ஹு லிமன் ஹமிதா" எனக் கூறினால் அதற்குப் பதிலளித்து " றப்பனா லகல் ஹம்து" எனக் கூறுவது மகத்தான கூலியைப் பெற்றுத்தரும்.

5-ஓதலை தனித்தனி வசனமாக ஓதுதல். இது வசனத்தை விளங்கவதற்கும், சிந்திப்பதற்கும் பிரதான காரணியாகவும், நபியின் சுன்னத்தாகவும் விழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களின் ஓதல் அமைப்பு ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாக்கிக் காட்டக்கூடியதாக இருந்தது.
6-அல் குர்ஆனை அதன் முறையைப் பேணியும், அழகிய ஓசை நயத்துடனும் ஓதுதல்.

அல்லாஹ் அல்குர்ஆனில்: "மேலும் குர்ஆனை (தெளிவாக வும்), அதன் முறையைப் பேணியும் ஓதவீராக எனக் குறிப்பிடுகின்றான். "உங்களது ஓசை நயத்தைக் கொண்டு அல் குர்ஆனை அலங்கரியுங்கள். ஏனெனில் அழகிய ஓசை நயம் குர்ஆனுக்கு இன்னும் அழகை அதிகரிக்கின்றது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹாகிம்).
7-அல்லாஹ் தொழுகையில் பதில் தருகின்றான் என்பதை அறிந்து தொழுதல்.

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை என்ற ''ஃபாத்திஹா" அத்தியாயத்தை எனக்கும் எனது அடியானுக்கும் இடையில் இரு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளேன், எனது அடியான் வேண்டுவதெல்லாம் அவனுக்கு (என்னால்) வழங்கப்படும், அடியான் "அல்ஹம்து லில்லாஹ் றப்பில் ஆலமீன்" எனக் கூறினால் அல்லாஹ் எனது அடியான் என்னை புகழ்ந்துள்ளான் எனக் கூறுகின்றான், (அடியான்) "அர்ரஹ் மானிர் ரஹீம்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "எனது அடியான் என்னை துதித்துள்ளான்" எனக் கூறுகின்றான், (அடியான்) "மாலிகி யவ்மித்தீன்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "எனது அடியான் என்னை மேன்மைப்படுத்தி விட்டான்" என பெருமிதம் கொள்கின்றான், "அடியான் இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்" எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் "இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ளதா (சமாச்சாரமா)கும், எனது அடியான் வேண்டுவதை எல்லாம் அவனுக்கு உண்டு. (நான்வழங்குவேன்) (அடியான்) " இஹ்தி நஸ்ஸிராதல் முஸ்தகீம் ஸிரா தல்லதீன் அன்அம்த அலைஹிம் கைரில் மஃக்லூபி அலைஹிம் வலல்லால்லீன்"; எனக் கூறினால் இது எனது அடியானுடன் தொடர்புடயதாகும், எனது வேண்டுவதை அவனுக்குண்டு) வழங்குவேன். என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிக் காட்டினார்கள்.
8-தொழுகையில் (சுத்ரா)தடுப்பை வைத்து, அதன் பக்கமாக நெருங்கித் தொழுதல்.

இவ்வாறு தொழுவதால் உள்ளச்சத்துடனும், பார்வையை சிதறிவிடாமலும், அதனைக் கடக்க எத்தணிப் போரை தடுத்தும், நிம்மதியாக தொழுவதற்குத் துணையாகவும் அமைவதுடன், தொழுகையை ஊடறுத்துச் சென்று அதனை பாழடித்திடும் ஷைத்தான்களின் நடவடிக்கைகளிகலிருந்தும் தற்காத்துக் கொள்ள உதவும். (உங்களில் தொழும் ஒருவர் ஷைத்தான் அவரது தொழுகையை முறித்திடாதவாறு (சுத்ரா) தடுப்பிற்கு நெக்கமாக நின்று தொழுது கொள்ளட்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூதாவுத்).

9-வலது கையை இடது கையின் மீது ஆக்கி நெஞ்சின் மீது வைத்து தக்பீர் கட்டுதல். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தயாரானால் அவர்களது வலது கையை இடது கையின் மீதாக்கி, நெஞ்சின் மீது வைப்பார்கள. இந்த அமைப்பு பணிந்து யாசிப்பவன் நிலை போன்றதாகும். மேலும் அது வீண் சேட்டைகளிலிருந்து தடுப்பதுடன், இறை அச்சத் திற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைகின்றது.
10-பார்வையை சுஜூத் செய்யும் இடத்தின் பக்கமாக நோக்குதல். நபி (ஸல்) அவர்கள் தொழுவார்களாயின் தனது தலையை தாழ்த்தி தனது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துபவர்களாக இருந்தார்கள். "தஷஹ்ஹுத்" ஓதுவதற்காக அமர்ந்தால் தனது பார்வையை ஆட்காட்டி விரலின் பக்கம் நோக்கியவர்களாக ஆக்கி, அதனை (விரலை) அசைப்பவர்களாக இருந்தார்கள். என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
11-ஆட்காட்டி விரலை அசைத்தல். இது இரும்பால் அடிப்பதை விட ஷைத்தானுக்கு மிகவும் கடிமான ஒரு கடிமானதாகும் என(முஸ்னத் அஹ்மத்) எனும் கிரந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடியான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதும், வணக்கத்தில் மனத்தூய்மையும் பொதிந்துள்ளது. இது ஷைத்தான் மிகவும் வெறுக்கின்ற ஒரு காரியமாகும்.

12- தொழுகையில் அத்தியாயங்கள், வசனங்கள், திக்ர்(இறை நினைவு)கள், பிரார்த்தனைகள் ஆகியவற்றை பலதரப்படுத்தி ஓதுதல். இந்நிலை தொழுகையாளிக்கு புதிய பல கருத்துக்கள், திக்ருகள் ஆகியவற்றை உணர்த்தும். இந்த நடைமுறை சுன்னாவாகவும், உள்ளச்சத்தில் பூரண நிலையை தேடித்தரக் கூடியதாகவும் இருக்கின்றது.

13-சுஜூதின் வசனங்கள் குறிக்கிடும் போது சுஜுத் செய்தல். இன்னும் அழுதவர்களாக முகம் குப்புற விழுவார்கள் இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். என 18:109 வனத்திலும், அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்கள் மீது ஓதிக் காட்டப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், சுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். என்று 19:58 வசனத்திலும் அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

"ஆதமின் மகன் சுஜ்தா வசனத்தை ஓதி சுஜுதும் செய்தால் ஷைத்தான் ஒரு ஓரமாக ஒதுங்கி, அழுது கொண்டு, எனக் கேற்பட்ட கேடே! சுஜூது செய்யுமாறு பணிக்கப் பட்ட ஆதமின் மகன் அதனை நிறை வேற்றினான். ஆகவே அவனுக்கு சுவனம் உண்டு. நானும்; சுஜுது செய்யும்படி ஏவப்பட்டிருந்தேன். ஆனால் (அதனை நிறை வேற்றாது) மறுத்தேன். ஆகையால் எனக்கு நரகம் உண்டு எனக் கூறி, கூறி கதறுவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

14-அல்லாஹ்விடம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாவல் கோரல். ஷைத்தான் எமது விரோதியாவான். தொழுகையாளி ஒருவரின் உள்ளச்சம் போகும் வரை அவனது தொழுகையை குழப்பி, அவனில் ஊசலாட்டங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது அவனது விரோத செயற்பாடுகளில் உள்ளதாகும். இதனால்தான் அடியான் அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவனை வழிப்பறிக் கொள்ளைக்காரன் போன்று தடுத்து நிறுத்துகின்றான். இறை விசுவாசி இவைகளுக்கு முன்னால் உறுதியாக இருப்பதும், சகிப்புடனும் இருந்து அதிலிருந்து விடுதலை பெறத் தேவையான திக்ருகள், தொழுகைகள் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடித்து (அரண் அமைப்பதால்) அவன் அதிலிருந்து விலகிவிடுகின்றான். ஏனெனில் "ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாகும் என அல்லாஹ் அல்குர்ஆனில் 3:76-ல் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

15-முன்னோர்களின் தொழுகையிலுள்ள உயிரோட்டத்தை சிந்தித்தல். அலி (ரலி) அவர்கள் தொழுகை நேரம் வந்து விட்டால் நடுக்கம் பிடித்து, அவர்களின் முகம் சிவந்து விடும். அது பற்றி அவர்களிடம் வினவப்பட்ட போது "அல்லாஹ்வின் மீதாணையாக! வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்பை அவைகள் ஏற்காது, ஒதுங்கிக் கொண்டன. ஆனால் நான் அதனை சுமந்து கொண்ட நேரம் வந்து விட்டது. எனக் கூறுவார்கள். எனவும், அறிவிக்கப்படுகிறன்றது. ஸயீத் அத்தன்னூகி என்ற அறிஞர் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கின்ற வரை அவரது கன்னங்களிலிருந்து கண்ணீர் கசிந்த வண்ணமாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர்.

16- தொழுகையில் இறையச்சத்துடன் இருப்பது பற்றிய சிறப்பம்சத்தை உணர்தல். கடமையான தொழுகை சமூகம் தரும் எந்த முஸ்லிமும் அதன் உழூவையும், அதன் ருகூவையும், அதன் உள்ளச்சத்தையும் அழகு படுத்திக் கொள்வாரானால் அவரது பெரும்பாவமில்லாத எந்தப்பாவத்திற்கும் அது பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்).
17-தொழுகை பிரார்த்தனை செய்ய வேண்டிய இடங்களில் -குறிப்பாக- சுஜூதின் நிலையில் அதிகம் ஈடுபாடு காட்டுதல். உங்கள் இரட்சகனை பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள். (7:55). அடியான் தனது இரட்சகனுக்கு சுஜூதின் நிலையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றான். ஆகவே அதில் பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள். (முஸ்லிம்).

18-தொழுகைக்குப்பின் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதுதல்.

புதிய பதிவுகள்

அத்வைதம் - NON DUALISM - டாக்டர் அஷ்ரப் (வீடியோ)

நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்களும் - மெளலவி அலாவுதீன் பாக்கவி (வீடியோ)

ஈமானில் உறுதி வேண்டும் - மெளலவி அலி அக்பர் உமரி (வீடியோ)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) - Engr. ரஃபீக் ஜக்கரியா (வீடியோ)

அன்றாட வாழ்வே வழிபாடாக - மெளலவி ஜமால் முகம்மது மதனி (வீடியோ)

இறையச்சம் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (வீடியோ)

சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு - மெளலவி மன்சூர் மதனி (வீடியோ)